‘நல்லாசிரியர்’ விருது

தினமணியில் வெளிவந்த எனது கட்டுரை - நா.மு.

விண்ணப்பித்து 
வாங்குவதா விருது? (தினமணி-02-8-2011)
                       
தமிழக அரசு தரும்  நல்லாசிரியர்’ விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர்-5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி, ‘கலைமாமணி’; விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் அட இவருக்கா இந்த விருது?’ எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப் படுவதும்சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது! இதனால்இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகிவிருது பெற்றவர்க்கும்,-ஏன்விருதுக்குமே கூட- மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது! அரசுகள் மாறலாம்கட்சி-அரசியல் மாறலாம்ஆனால் மரபுசார்ந்த சிலமாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.
                       சொல்லப்போனால்திரைக் கலைஞர்க்கும் ஆசிரியர்க்கும் அரசு விருது தருவதுபோலஎடுத்துக்காட்டான உழவர்களுக்;கும்,பொதுநோக்கில் சேவைபுரியும் அரசு ஊழியர்-மருத்துவர்க்கும்,புதுமைசெய்யும் இளைஞர்க்கும்நல்லவற்றைத் தரும் இதழ் மற்றும் செய்தியாளர்க்கும் நமது அரசு விருது வழங்கி கௌரவம் செய்தால் பல துறைகளிலும் உற்சாக ஊற்றுக் கிளம்பாதா என்ன
                       அரசியல்கடந்துமக்களால் மதிக்கப்படும் சான்றோர்புனிதமான பணிகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டோர் ஆகிய பெருமக்களைஅரசு தானே முயன்று தகவல் சேகரித்து,தகுதியானவரை அடையாளம்கண்டுஅழைத்துப்பாராட்டிவிருதுபெறும் அவரது தகுதிகளை அனைவரும் அறியச்சொல்லிஅவரது பணிதொடர வாழ்த்தி பின்னர் விருது தந்து அனுப்ப வேண்டும்.
                          ஆனால் இன்றுள்ள நிலை? ‘நல்லாசிரியரோ, ‘கலைமாமணியோ அவரே தனது தகுதிகளை எடுத்து விளம்பி --அவற்றுக்கான சான்றுகளையும் இணைத்து-- விண்ணப்பித்த பிறகு, ‘சிபாரிசுகளின் அடிப்படையில் தேர்வுசெய்துநூற்றுக் கணக்கானோரை வரிசையாக வரச்சொல்லி இலவச விநியோகம் போல விருது’ கொடுத்து அனுப்புவதில் என்ன கௌரவம் இருக்கிறதுஇதன் பலன்தான் என்ன?
             கடந்த ஆண்டு தமிழே தெரியாத தமன்னாவுக்கும்ஸ்ரேயாவுக்கும் தமிழ்நாடு அரசு கலைமாமணி’ விருது தந்தது நகைப்புக்கு இடமானது. கலைக்கு மொழிகிடையாது எனும் பொத்தாம் பொதுவான விளக்கம் போதாது. மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் தகுதி’ என்றால்,சர்க்கஸ் கோமாளிகளுக்குக் கொடுப்பதுதான் சரியானது! அவர்கள்படும் பாட்டுக்கு அங்கீகாரமாவது கிடைக்கும்!
           சிலர்-பலரின் சிபாரிசுகளால்தகுதியற்றவர்க்கும் வாரிவழங்கப்படும் விருதுகளால்சான்றோர் பலரும் விருதுகளைப் பார்த்து எள்ளி நகைப்பதும் சற்றே தள்ளி நடப்பதும் நடக்கும் தானே
முதலில் ஒரு கேள்வி: எனக்குக் கடன் வேண்டும்உரியமுறையில் திரும்பக் கட்டிவிடுவேன்“ என்று ஆசிரியர் அரசிடம் விண்ணப்பம் செய்யலாம், “எனக்குப் பணிஇடமாறுதல் வேண்டும் இந்தஇடம் கிடைத்தால் நல்லது” என்று அரசிடம் விண்ணப்பிக்கலாம். இவற்றை விட்டு, ‘எனக்கு விருது கொடுங்கள்’ என்று சுயமரியாதை உள்ள யாரும் விண்ணப்பம்’ போடுவார்களா என்னஏன் இது நமது அரசுகளுக்குப் புரிவதில்லை?
இப்போதுஇந்த விருதுகளைப் பெற விண்ணப்பம் போடும் பலரும்,அதை எப்படியாவது வாங்கிவிடச் செய்யும் செலவு-உள்ளிட்ட செயல்கள்’ விருதுகளே வெட்கப்படும்படியல்லவா உள்ளன?
          அப்படியானால், “இதுவரை விருதுபெற்ற யாருக்கும் சுயமரியாதை கிடையாதா?” என்றுகேள்வியைத் திருப்பினால்அப்படி எல்லாரையும் சொல்லிவிட முடியாது. பெரும்பாலோர் அப்படி இருந்தாலும்,சுயமரியாரை உள்ள சிலர்தம் மீது அன்பு கொண்டவர்களின் தொந்தரவு தாங்காமல்கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு விருதுவாங்க மட்டுமே மேடைக்கு வந்ததும் உண்டு! இப்படியான விருதை அவர்கள் பெரிதுபடுத்தாமல் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அப்படியானவர்களைச் சந்திக்கும்போது --விருதாளர்களைத் தேர்வுசெய்யும் முறை மற்றும் விருதுவழங்கும்-- முறை சரியல்ல என்றே அவர்களும் மனம் கசந்து சொல்கிறார்கள்.
           இலக்கியத்தில் இன்றும் எல்லாராலும் மதிக்கப்படும் -இந்தியஅரசின் கௌரவம் மிகுந்த இலக்கிய விருதான-- சாகித்திய அகாதெமிவிருதுக்கான தேர்வுக் குழுவில் நான் சில முறை இருந்திருக்கிறேன். அவர்கள் பல படிகளை வைத்திருக்கிறார்கள். முதல்கட்டத் தேர்வின் போதுபத்துப்பேர்களைக் கேட்பார்கள். பரிந்துரைக்கான புத்தகங்களை அனுப்பிவைப்பதோடு, ‘இந்த நூல்கள் தவிரவும்உங்கள் பார்வையில் பட்டவிருதுக்குத் தகுதியான நூல் என்று கருதுவதை நீங்களே வாங்கிக்கொண்டுஅந்த நூலின் தகுதிகளை எங்களுக்குத் தெரிவியுங்கள் அந்த விலையை நாங்கள் தந்துவிடுவோம்’ என்றும் நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அறிவிக்கப்படும் வரை எழுத்தாளருக்குத் தெரியாமலே இது நடக்கும்! பலகட்டத் தேர்வு செய்தோரை அவர்களுக்குத் தெரிய வழியுமில்லை!
          இதேமுறையில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் என் தலைமையி லான தேர்வுக்குழு, 1997ஆம் ஆண்டின் சிறந்தநாவலாக சாய்வு நாற்காலி’ நாவலைத் தேர்வுசெய்தது. மதுரை - திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவில் நானே என் கையால் அந்த விருதை எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்களுக்கு வழங்கியபோது விருதுபெற்றவரைப் போலவே விருது தந்தவர்களும் மகிழ்ந்தோம். ஆதன்பின்னரே சாகித்திய அகாதெமி விருதும் அதே நாவலுக்காகக் கிடைத்ததை மதிப்பிற்குரிய படைப்பாளியான அவரே கூறி மகிழ்ந்தார்!
          இதேபோல 1993இல் வெளிவந்த எனது புதிய மரபுகள்’ கவிதை நூலுக்கு அந்த ஆண்டின் சிறந்த கவிதைத்தொகுப்புக்கான விருதை வழங்கிய தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றம் என்னிடம் எந்தவிதமான விண்ணப்பத்தையும் கேட்கவில்லை. அவர்களாகவே அழைத்துத் தந்தார்கள்.
தனி அமைப்புகளே தகுதியானநூல்தகுதியான ஆசிரியர்தகுதியான இலக்கியவாதிமுதலான பல விருதுக்குரிய தகவல்களைத் திரட்டிவிடும்போதுநமது அரசால் திரட்ட முடியாதா என்ன?நிச்சயமாக முடியும்.. தேர்வுக்குழுவினர் கொஞ்சம் விவரமானவர்களாகவும்சிரமம் பாராத வராகவும் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவராகவும்’ இருக்கவேண்டும். அவ்வளவே! விருதுக்குத் தேர்வுசெய்யும் குழுவை முதலில் சரியாகத் தேர்வு செய்துவிட்டால் எல்லாம் சரியாக நடக்க வழியண்டு
இன்னொன்று விருதுபெறுவோரின் வயது சார்ந்தது
           ஆசிரியப் பணியில் ஓய்வுபெற ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ள,அல்லது ஓய்வு பெற்றுப் பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் நல்லாசிரியர்விருது என்று புகழ்பெற்றுவிட்ட மாநில அரசின் சிறந்த ஆசிரியர்க்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுவிண்ணப்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது. இந்த விருதை நாற்பது வயதுக்கும் முன்னதாகத் தர முடிந்தால்அவரதுநல்லாசிரியப் பணியை’ மீதமுள்ள ஆண்டுகளில் பள்ளிக்குழந்தைகளும் பயன்பெற உதவியிருக்காதா என்ன?  நிச்சயம் அதற்கொரு பாதிப்பு அவர்களிடம் இருக்கும். இதைவிட்டு முதியோர் உதவித்தொகை’ போல விருதுகளை ஓய்வுபெறும் வயதில் தந்து வீட்டுக்கு அனுப்புவதால்அவர்வேண்டுமானால், ‘ஓய்வுபெற்ற-மற்றும்-விருதுபெற்’ என்று சாகும்வரை போட்டுக் கொள்ளலாமே தவிர,விருதுபெற்ற முதியவரால் சமுதாயத்துக்கு -பணிபுரிந்த துறைக்கு- என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?
             பொள்ளாச்சியில் இருந்துகொண்டுகவிஞர் சிற்பிஅவர்கள்மூத்தபடைப்பாளி ஒருவருக்கும் இளைய படைப்பாளி ஒருவருக்குமாக -இரு பிரிவுகளாக- விருதுடன் கூடிய ரொக்கப்பரிசுகளை ஆண்டுதோறும் தந்து கௌரவிப்பது போல தமிழகஅரசும் கலைமாமணிநல்லாசிரியர் விருதுகளை இளையவர்க்குத் தனியாகவும்மூத்தவர்க்குத் தனியாகவும் கூட வழங்கலாமே
             சான்றோரை கௌரவிப்பது தேவை அதைவிடவும் அவரதுபணி விருதுபெற்;ற பின்னரும் சமூகத்திற்கும் பள்ளிக்குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு அரசு யோசிக்கவேண்டாமாஇளைஞர்க்குக் கொடுத்து,ஒருவேளை அவர் தவறு செய்துவிட்டால்...விருதுக்கு அவமரியாதையாகிவிடுமே! என்றால்இப்போது விருதுபெற்றோரில் -விருதுபெற்ற பிறகும்-- தவறுசெய்து தண்டனை பெற்றவர்களும் உண்டே! குற்றப் பட்டியலில் பெயர் இடம்பெற்ற ஒருவருக்கு மத்திய அரசுபத்மஸ்ரீ’ விருது தந்ததும் நடந்ததே!
            அதோடுஅரசு விருதுபெற்றோர் காலமாகும் போதுஅந்தந்தத் துறைசார்நத அரசு உயர் அலுவலர்கள்-- ஏன் மாவட்ட ஆட்சியரே கூட-- வந்துஅஞ்சலி செலுத்திஅரசின் சார்பாக கௌரவிப்பது,அல்லது அரசின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடுவது விருதுபெற்றவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல விருதுக்கே கௌரவமாக இருக்குமே! இதையும் அரசு யோசிக்கலாமே?
           பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பால சுப்பிரமணியனும் பத்மஸ்ரீ விருது பெற்றுவிட்டார். சுசிலாம்மா பத்மப+ஷன் விருதே பெற்றுவிட்டார். இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்தியஅரசுஇவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் பத்மஸ்ரீ விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம் தானேபாவம், அவர் இந்த விருது வாங்கும்“ தொழில் நுட்பம் தெரியாதவரோ என்னவோ?
            அரசுவிழாக்களில் பாடப்படும் நீராரும் கடலுடுத்த’ எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மட்டுமல்லாமல் பல்லாயிரம் திரைப்பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த இசைமேதை ஏம்.எஸ்.வி. போலும் எண்ணற்ற மேதைகளும்நல்ல ஆசிரியர்களும் மட்டுமல்ல,விருதுக்கத் தகுதிவாய்ந்த உழவர்களும்;, அரசு ஊழியர்-மருத்துவர்களும்எடுத்துக்காட்டான இளைஞர்களும்இதழாளர் மற்றும் செய்தியாளர்களுமாய்ப் பற்பலர் விளம்பர வெளிச்சமே இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்விருதுகளுக்காக ஏங்கி அல்ல,விருதுகளை அலட்சியப்படுத்தி விட்டு!
           தான் தரும் விருதுகளின் கௌரவத்தைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை!அரசின் கடமையை உரிமையோடு எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை! 
-------------------------------------
நன்றி : தினமணி – நாளிதழ் - 02-8-2011  
---------------------------------