எனது புதிய மரபுகள் - தொகுப்பிலிருந்து...


டில்லி விளம்பரம்.

தொலைக்காட்சியின்
மொழி உணர்வு
தூய்மையானது
தமிழ்ச் செய்தி
இன்னும்
தமிழில்தான் வருகிறது!

தொல்பொருள் ஆய்விலும்
தொலைக்காட்சியின்
பங்களிப்பு அபாரம்
வாரா வாரம்
ஒரு திரைப்படம்!

எங்கள் தாத்தாவுக்கு
ஏக சந்தோஷம் -
அடுத்த வாரம்
ஆயிரம் தலைவாங்கிய
அபூர்வ சிந்தாமணியாம்!

கலைக்கு வயதில்லை!
சும்மா சொல்லக்கூடாது
அந்த ஐ.ஏ.எஸ். வீட்டுக்
கிழவியின் நடனம்
அருமை!

ஆக,
நீங்கள் இந்த
அரசாங்கத் திட்டத்தை
ஆதரிக்கிறீர்கள்
என்றே முடிந்து
எரிச்சலைக் கிளப்பும்
பேட்டிகள் -
திட்டங்களுக் கெதிராக
மக்களைத் திரட்டும்
நல்ல ஏற்பாடுகள்!

மேதைமைக்கு
கால வரம்பில்லை
தொடக்ககால
நாடகங்களை
இன்னும் தொடர்வது
அதனால்தான்.

மின் வெட்டுக்கூட
மக்களுக்கு
மகிழ்ச்சி தருவது
டி.வி. நாடகத்தால்தான்!

இரண்டாம்ப்பு படிக்கும்
 என் மகன்
Colour TV.’  என்பதை
கோளாறு டி.விஎன்றே
சரியாகப் படித்தான்!

எப்போதோ பூக்கும்
ர் அத்திக்காக
எவ்வளவு நாள் தான்
இதற்கு
மின்-நீர் விடுவது?

அறிவியலின்
இளைய பிள்ளை
ஆள் வோரின்
கைப் பிள்ளையாய்
ஆடும் வரை
டி.வி.யின்
சுருக்க விளக்கம்
டில்லி விளம்பரம் தானே?

அழுக்கில் கிடக்கும்
இந்த
சோப்புப் பெட்டியை
சுத்தப் படுத்தும் வரை
ஏ ! தவணைக் காரா!
என்னை
இரண்டு துன்பங்களிலிருந்து
காப்பாற்று!

இந்தப் பெட்டியை
வந்து
எடுத்துக்கொண்டுபோ!
--------------------------------------------(எழுதிய ஆண்டு 1989---தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத போது எழுதியது. இப்போதும் அரசுத் தொலைக்காட்சிக்கு இது பொருத்தமாகத்தானே உள்ளது? )---------------------------------------------------------  

‘மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும’


‘மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும’

தினமணி - 30.01.1997

தமிழ் வளர்ச்சி கருத்தரங்கில் (இடமிருந்து) போப் ஆதவன் சுஜாதா முத்துக்குமரன் ஞானி முத்துநிலவன் செந்தி;ல்நாதன் தேனிரா பாண்டியன்.

ஓசூர்ஜன.28- தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஒசூரில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒசூர்கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலை. முன்னால் துணைவேந்தர் முத்துக்குமரன் எழுத்தாளர் சுஜாதா பத்திரிகையாளர் ஞாநி தமிழ் நாடு- புதுவை மாநில வழக்கறிஞர்  சங்கங்களின் கூட்டமைப்புத் துணைத் தலைவர் தேனிரா. பாண்டியன் கவிஞர்  முத்துநிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளார் சங்கத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கிப் பேசினார.; பழ.பாலசுந்தரம் வரவேற்றார்.

செந்தில்நாதன் பேசியதாவது இந்தியாலுள்ள அனைத்தும் மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். இந்திக்கு மட்டும் தனி அந்தஸ்து தருவது சரியல்ல.
ஊர்களின் பெயரையும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளையும் மாற்றுவதால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. நிர்வாக அளவில் மாற்றம் வந்தால்தான் தமிழ் வளர இயலும்.

சுஜாதா: அனைத்தையும் தனிதமிழில் வழங்கவேண்டும் என்பது இயலாத காரியம். சிலவற்றில் வார்த்தைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம். இம்மாதிரியான வாசகங்களை வாசகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நாமாக எதையும் முடிவு செய்யக் கூடாது.
தமிழ் எழுத்து வடிவம் தமிழில் தொழில்நுட்பச் சொற்கள் தமிழ்  விசைப்பலகை தமிழ்க் கணிப்பொறிக்கான குறியீடு போன்றவற்றை நிர்ணயிக்க தமிழக அரசின் உயர் கல்வி மன்றம் குழு ஒன்றை அமைந்தள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைத் தமிழ் உலகம் ஏற்கும் போது இப்பணி ஒழுங்கு  பெற்று புதிய குறியீடுகளுக்கு வீணே செலவிடும் நேரம் குறையும்.
தகவல் தளம் அமைத்து அதில் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் உள்ளிடும் பணி தொடங்கியுள்ளது. இது தொடர வேண்டும். இப்பணியை அரசோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகமோ அரசு நிறுவமோ ஏற்றுக் கொண்டு ஒருமைப்படுத்த வேண்டும் . இதனால் தமிழின் பண்டை இலக்கியங்கள் அனைத்தும் நிரந்தரமாக இதனால் பாதுகாக்கப்படும்.
முத்துக்குமரன்: ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பதை இன்றைய பெற்றோர்  கௌவரமாகக் கருதுகின்றனர்.
தமிழை நம்முடைய மக்கள் புறக்கணிக்கக் காரணம்: ஆங்கிலம் படித்தால்தான் வேலை வாய்ப்பு கல்வி கிடைக்கும் என்ற தவறான கருத்து: ஆங்கிலம் படித்தவன் கெட்டிக்காரன் என்ற எண்ணம் : தமிழில் எளிதாக எழுதினால் அதை மதிப்பதில்லை. இத்தகைய கருத்துக்கள் மாற வேண்டும்;

ஞாநி: முன்பு பத்திரிக்கை படிக்கும் வழக்கம் குறைவு. பத்திரிகைகளும் குறையும.; மக்களுக்குப் புரியும் வகையில் வார்த்தைகளை நாம் தரவேண்டும். சுhதாரண மக்கள் மத்தியில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றினால் புரியாது. மக்கள் பயன்படுத்தும் தமிழ் கலப்பு மிக்கது. ரேஷன் கார்டு என்றால் அவர்களுக்குத் தெரிகிறது. குடும்பள அட்டை என்றால் புரிவதில்லை அதே சமயம் புதிய  வார்த்தைகளைக் கொடுத்துவிட்டு அவற்றின் பழைய வார்த்தையை அடைப்புக் குறிக்குள் கொடுக்கலாம்.
பொதுவாகத் தமிழைச் சிதைப்பதில் நாளேடுகளை விட வார இதழ்களே அதிகப் பங்காற்றுகின்றனர்.

தேனிரா.பாண்டியன்: நீதி மன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் இருக்கவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் ஆங்கிலமே நீதிமன்ற மெதழியாக உள்ளது.தாவா பைசல் வியாஜ்ஜியம் ஜப்தி சம்மன் சிரஸ்தார் போன்ற வார்த்தைகள் இன்னும் நீதிமன்றங்களில் புழக்கத்தில் உள்ளன.
அனைத்துச் சட்டங்களும் இன்றைய காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மக்கள் அறியச் செய்யவேண்டியது அரசின் கடமை.
முத்துநிலவன்: நடைமுறை தமிழ் பேசுகிறவர்களே தமிழை வளர்க்க முடியும். தமிழ் உணர்வு வெறியாமாறுவது தமிழ் வளர்ச்சியை  பாதிக்கும். தமிழிசை  இன்று மறக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொடர்புச் சாதனங்களில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. தமிழ் மொழியில் உள்ள சில சிறப்புகள் ஆங்கிலத்திலும் உண்டு. அதை குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். தனித்தமிழில் பேசுவோரை கிண்டல் செய்வது தவறானது. அதேசமயம் வார்த்தைகளை வலிந்து திணிப்பதும் தவறானது. அறிவியல் தமிழ்ச் சொற்களை கண்டுபிடிப்பது ஊக்குவிக்கப்படவேண்டும்.
நிகழ்ச்சியில் ஓசூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதவன் போப் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சில முக்கிய நகரங்களில் தமிழில் தந்தி அனுப்பும் முறை உள்ளது. இது கிராமங்களில் விரிவுபடுத்தப்படவில்லை இதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசியலமைப்ப சட்டத்தின் எட்டாவது  அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் மத்தியிலும் ஆட்சி மொழியாக்கச் சட்ட திருத்தம வேண்டும் என்பதை உள்ளிட்ட தீர்மானங்கள் கருத்தரஙகில் கொண்டு வரப்பட்டன.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கலைஞர் தொலைக்காட்சி நேர்காணல்


அன்பினிய நமது வலை நண்பர்களே! வணக்கம்.
நான் தெரிவித்திருந்தபடி நமது நண்பர் புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கலைஞர் தொலைக்காட்சி நேர்காணலைப் பார்க்க முடியவில்லை என நண்பர்கள் பலரும் சொன்னது எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது! - நானும் அதே மின்வெட்டுக் காரணமாகப் பார்க்க முடியவில்லையே!
இப்போது நமது அய்யா அவர்கள் ஒரு நல்ல செய்தி அனுப்பியிருக்கிறார்கள்... பாருங்கள் பார்த்துவிட்டு அவருடன் பேச .. அலை பேசி எண் 9442029053
அன்புடன்,
நா.மு.
20-03-2012 காலை 7.50 (இன்னும் கொஞ்ச நேரத்தில் நம் பகுதியில் மின் வெட்டு தொடங்கிவிடும்!)
பி.கு -1 கீழே அவரது வலை - காணொளி இணைப்பும் தரப்பட்டுள்ளது கண்டு-கேட்டு-கணித்தமிழை உண்டு- உயிர்க்க வேண்டுகிறேன்... பிறகென்ன பொறாமை தான்... ம்... நான் சில ஆண்டுகளின் முன் இதே கலைஞர் தொலைக்காட்சியின் சந்தித்த வேளையில் பேசினேன்... அப்பல்லாம் இந்த மாதிரி “யு-ட்யுப்“ இணைப்புங்கிற சமாச்சாரமே நமக்குத் தெரியாதுங்க... சரி அய்யாவின் நேர்காணலையாவது பாருங்க..
பி.கு.-2 அய்யாவின் கடிதத்தைப் படியுங்க, அப்பறம் போய்ப் பாருங்க, பேசுங்க... நன்றிங்க..
-----------------------------------------------------------------------

அன்புடையீர் வணக்கம்.

கலைஞர் தொலைக்காட்சியில் 15.03.2012 காலை 8 மணி முதல் 9 மணிவரை சந்தித்தவேளையில் என்னும் பகுதியில் திரு.இரமேஷ் பிரபா அவர்கள் என்னை நேர்காணல் செய்தார்கள். அதன் காணொளியை விடுதலை வலைக்காட்சித் தளத்தில் திரு.பிரின்சு அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதனை நண்பர்களின் பார்வைக்கு இணைத்துள்ளேன்.
கண்டு மகிழுங்கள்.
கருத்துரைக்க வேண்டுகின்றேன்.


அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து...


போர்க்குணத்துக்கு ஏது தடை?

(உருதுக்கவிஞர் ஃபெய்ஸ்-ஏ-ஃபெய்ஸ் எழுதிய கருத்துச் சுதந்திரம் பற்றிய இக்கவிதையை மத்தியப் பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அஞ்சல் அட்டையில் அச்சிட்டு வெளியிட்டு உள்ளது – 1989.)
  (இந்தியிலிருந்து ஆங்கிலத்தில்-தேபேஷ் தாகூர் (மே. வங்கம்)

சுருக்கென எழுதும் என் இரும்புப் பேனாவை அவன்
சுக்கல் சுக்கலாய் முறிக்கலாம்!- நான்
நெருப்பெனப் பற்றுவேன் ! நிச்சயம் பரவுவேன்!
நினைப்பதைத் தடுக்க முடியாது!

எழுத்தைத் தடுக்கலாம்! எண்ணத் தடைபோட
எந்தத் தடைச்சட்டம் இங்கு வரும்?- என்
கழுத்தை ஒடிக்கலாம்! கையை முறிக்கலாம்
கவிதையைத் தடுக்க முடியாது!

வாயை அடைக்கலாம்! வன்சிறை பூட்டி என்
வாழ்க்கையைக்கூட அழிக்கலாம்! - மூச்சில்
ஓயாது பீறிடும் ஓங்காரப் போர்க்குண
உணர்ச்சியைத் தடுக்க முடியாது!
-----------------------------------------------------------------------
இந்தக் கவிதையை மொழிபெயர்க்கும் போது - ஒவ்வொரு சாவிலும் தன் தனி இழப்பை மனத்தில் கொண்டு எந்தச் சாவிற்கும் ஓயாமல் ஒப்பாரி தொடரும் கிழவிகளைப் போல் - நமது பாரதியின் பாடல்களுக்கு 1928இல் அன்றைய சென்னை ராஜதானி அரசு தடை விதித்த செய்தியை நினைத்துக் கொண்டு - எழுதியது இந்தக் கவிதை. என்ன நாஞ்சொல்றது சரிதானே? --நா.மு.-15-03-2012)

கலைஞர் தொலைக்காட்சியில் முனைவர் மு.இளங்கோவன் அய்யாவின் நேர்காணல்

அன்பின் வலை நண்பர்களே! வணக்கம்.
ஒரு மகிழ்ச்சியான செய்தி.
நாளை -15-03-2012 வியாழக் கிழமை- காலை 8மணியிலிருந்து 8.50வரை நமது கலைஞர் தொலைக்காட்சியில் நமது நண்பர் 
முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் நேர்காணல் வருகிறது.

மின்சார பாத்தியதை உள்ள பெருமக்கள் அனைவரும் கண்டு கேட்டு மகிழ வேண்டுகிறேன்.

அய்யா மு.இ.அவர்கள் -
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் விருது பெற்ற செம்மாந்த தமிழறிஞர் என்பதால் மட்டுமல்ல-

சொந்த உழைப்பில் பாரதிதாசன்-பெரியார்-கருத்துகளைப் பரப்பும் கொள்கையாளர் என்பதால் மட்டுமல்ல -

இன்றைய தமிழின் நுனிமுனைக் கொழுந்தாம் “இணையத்தமிழ்“ வளர்ச்சிக்கு ஏற்பன செய்துவரும் ஏந்தலார் என்பதால் மட்டுமல்ல -

தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வரும் ஒருசில தமிழாசிரியர்களில் முன்னோடி என்பதால் மட்டுமல்ல -


நல்ல மனிதர் என்பதால் அவசியம் பாருங்கள்.

எனக்கு வலையார்வம் வரத் தூண்டிய “ஞான குரு” என்பதால் இந்த குருதட்சணை!

அவரது வலை வாசல் http://muelangovan.blogspot.in/

அவரது அலைபேசி 9442029053

கலைஞர் தொலைக்காட்சி பார்த்துவிட்டு அவரிடம் பேசுங்களேன்?
அன்புடன்,
நா.மு.

எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து...


பேடிக் கல்வி…
காலத்தால் அழியாத    
கவியாக்கும் அவசரத்தில்    காளியம்மா வந்து
சூலத்தால் எழுதியதில்
நாக்கு துண்டாகி...
பேச்சும் போச்சு!

சுதந்திர ஆட்சி!

சட்டைத்துணி கேட்டு
சண்டையிட்டோம்!
மூன்று வண்ணத்தில்
ஒட்டுத்துணி கிடைத்தது!
------------------------------------------------

எங்கோ எவனோ?

இலங்கையிலே செத்ததுவும் மனிதன்,  அஸ்ஸாம்
              எரிந்ததிலே செத்ததுவும் மனிதன்,  பஞ்சாப்
கலங்கையிலே செத்ததுவும் மனிதன்,  டெல்லிக்
              கலவரத்தில் செத்ததுவும் மனிதன், காஷ்மீர்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதன், பாபர்
              கோவிலிலே செத்ததுவும் மனிதன், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த
              மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!

(எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து -1993)

கல்வியில் ஜனநாயகம் தேவை! – நா.முத்து நிலவன்



                  தேர்வு எழுதிய மாணவர்க்கு திருத்தப்பட்ட விடைத்தாளின் நகல் தரப்படும் என முடிவெடுத்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை ஆசிரியர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துணைவேந்தரும் பாராட்டுக்கு உரியவர்கள் கல்வியில்-நாட்டு முன்னேற்றத்தில்-ஜனநாயகத்தில் அக்கறையுள்ள யாரும் பாராட்ட வேண்டிய முடிவு இது.
உயிரைக் கொடுத்துப் படிக்கும் மாணவர்க்கு தமது விடைத்தாள்கள் எவ்வாறு திருத்தப்பட்டுள்ளன என அறிந்து கொள்ள முழு உரிமையும் உண்டு.
மதிப்பெண்ணிலேயே தமது குழந்தைகளின் எதிர்காலம் உள்ளதாக நம்பும் பெற்றோர்க்கு இதன்மூலம் மன உளைச்சல் குறையும் மிகச்சிறந்த அத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த நிதானம் அவசியம். திருத்தும் ஆசிரியர்க்கும் அரசுக்கும் பொறுப்பு கூடுதலாகும். இந்த  இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சுமத்தாத அளவில் ‘பழிவாங்கப்படுவார்கள்’ எனும் நியாயமான சந்தேகத்தைத் தனது செயல்பாடுகளின் மூலம் அரசு போக்க முன்வர வேண்டும்.
மூன்று மணி நேரத்தில் எழுப்படும் தேர்வுத்தாளை திருத்த குறைந்தது பதினைந்து நிமிஷமாவது தேவைப்படும். திருத்தும் ஆசிரியர் அதே பாடத்தைப் பல ஆண்டுகள் நடத்திய அனுபவசாலியாக இருப்பின் 3 மணி நேரத்தில் 12 தாள் திருத்தினால் மதிப்பீடு முறையாக இருக்கும். ஆனால் கசப்பான உண்மை என்னவெனில் திருத்துவோர் அவ்வளவு நேரம் எடுத்துப் பெரும்பாலும் திருத்துவதில்லை ‘ஆள் போதவில்லை’ என்று 50 தாள்களை ஒரே நாளில் தருவதை அரசும் நிறுத்துவதில்லை!  இதனால் இருவகைப் பாதிப்புகள் உண்டு. அரசு இதில் சிக்கனம் பார்ப்பதோ ஆசிரியர்கள் மெத்தனம் காட்டுவதோ சரியல்ல என்பதை உணர வேண்டும்.
மாணவர்கள் மற்றும் எதிர்காலத் தமிழகத்தின் நலன் கருதி திட்டமிட்டு மதிப்பீடு நடத்தப்படுமானால் தமிழகம்  இந்தியாவுக்கே வழிகாட்டியாக முடியும். மகத்தான வழியில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கல்வி அமைச்சரும். தமிழக முதல்வரும் மனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதனால் மாணவர்-பெற்றோர் கவலை தீரவும் ஆசிரியர் பெருமை உயரவும் தமிழகமே தலைநிமிரவும் வழி பிறக்கும்.

வெளயிட்டமைக்கு நன்றி : ‘தினமணி’ நாளிதழ் நாள்: 07.06.1997
---------------------------------------------------------------
மதிப்பீட்டு முறை பற்றியே மறுமதிப்பிடு தேவை! – நா.முத்து நிலவன்
கல்விமுறை கெடுத்தது பாதி தேர்வுமுறை கெடுத்தது மீதி! மெக்காலே கல்வி முறையால் சிந்தனையை மழுங்கடித்து ‘கிளிப்பிள்ளை கிளார்க்கு’களையே இதுவரை உருவாக்கி வந்தோம். அதிலும் ‘தப்பித்து’ வந்த சிலரை மதிப்பீட்டு முறையால் மடக்கியிருக்கிறோம்! இரண்டு தலைமுறைகளின் இழப்புக்கு எப்படி ஈடுசெய்யப்போகிறோம்?
துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி கட்டுரைகளைப் படித்தபிறகு ‘மைய மதிப்பீட்டு முறையா? இல்ல மதிப்பீட்டு முறையா? என்பது பற்றி இனிமேலும் விவாதிக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. மதிப்பீட்டு முறையின் சமூக விளைவுகளைச் சரியாக மதிப்பிட்டு தேவையான மாற்றங்களைச் செய்வதே உடனடித் தேவையாகும்.
அதோடு இந்த மதிப்பீட்டுக் குறைபாடுகள் கல்லூரிக் கல்விக்கு மட்டுமல்ல நூறு சதவிதம் பள்ளிக்கல்வி புண் புரையோடி விட்டது இனியும் புனுகு ப+சுவதில் அர்த்தமில்லை. (10,12-ஆம் வகுப்புக்கும் பொருந்தக் கூடியதே! கடந்த  கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பல ஆயிரம் பேர் மறுகூட்டல் கேட்டார்களே! இங்கு மறுமதிப்பீட்டுக்கும் வழியில் லையாமே! இதை என்ன செய்வது?) மறுமதிப்பீடு மறுகூட்டல் கேட்டு அலையும் மாணவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்டுவதற்குள் மதிப்பீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதுவும் கூட முதற்கட்டம்தான். இறுதிக்கட்டம் செல்லரித்துப்போன நமது கல்வி முறையையே மாற்றியமைப்பதில் முடிய வேண்டும்.
கல்வி முறையில் கை வைக்காமல் சமூக மாற்றம் சாத்தியமேயில்லை. இந்த வகையில் ப+னைக்கு மணி கட்டும் வேலையைச் செய்திருக்கும் துணைவேந்தரை மனமாரப் பாராட்டுகிறேன்.
கல்வியாளர்களே கைகோத்து வாருங்கள. மூன்றாவது கண்ணைத் திறக்கும் அவசரத்தில் இருக்கும் கண்களையே குருடாக்கும் கல்வி முறை தேர்வு மதிப்பீட்டு முறைகளை மறுமதிப்பீடு செய்வோம்! புதிய தோர் உலகம் செய்வோம்!

வெளியிட்டமைக்கு நன்றி: ‘தினமணி’ நாளிதழ் 22.07.1997
--------------------------------------------------------------------------

ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்?


chennai_teacher_uma
அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான். ஆனால்,சாகவில்லை. அவனால், சாக முடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலையாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள் 

 அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, "அய்யோ மகனே!என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். 
 இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று "அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே" என்று சொல்லி அழுதபோது, கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம்
 "நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்? அவனது குருநாதர் "சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்" என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது. பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான். பிறகு உங்களின் தாய் குந்தி, "போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை" எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள். பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது. போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாள். இப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, "நான் கொன்றேன் நான் கொன்றேன்" என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?" என்று சொன்னதாக ஒரு பாரதக் கதை உண்டு.

இப்போது சொல்லுங்கள்
 ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
 இர்பான் வெறும் அருச்சுனன் மாதிரி செத்த பாம்பை அடித்தவன் தான்!
  அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளி களாகி நிற்கிறார்கள் தெரியுமா? நாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை!

 இந்தக் கட்டுரையை எழுதுகிற நானும், இதை வெளியிடும் இதழாசிரியரும், படிக்கும் நீங்களும் என இந்தச் சமூகத்தில் வாழும் நாமெல்லாருமே ஆளுக்கு ஒரு வகையில் குற்றவாளிகள் தாம்"யு டூ புரூட்டஸ்?"  என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளத்தான வேண்டும். ஏனெனில் -
அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத புதுக்கோட்டை ஆசிரியர் சாரதாவை முதல் களப்பலியாக்கி, தமிழகம் முழுவதும் 36 ஆசிரியர்களை இழந்து பல லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர் அதிகபட்சமாக 56 நாள் வரை சிறையிருந்து, --1986இல் "ஜேக்டீஎன்றும் 1989இல் "ஜேக்சாட்டோ" என்றும்-- கத்திக் கதறிப் பெற்றதுதான் இன்று கைநிறைய வாங்கும் மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று, இன்று வேலைக்கு வரும் எத்தனை பேருக்குச் சொல்லியிருக்கின்றன நம்ஆசிரியர்-அரசுஊழியர் இயக்கங்கள்
 வரலாற்றை மறந்தவர் அதில் திரும்பவும் வாழ சபிக்கப்படுவர் என்பது உண்மைதானே? நாம் சபிக்கப்பட்டு விட்டோம்! இப்போது சம்பளம் கிடைக்கிறது! மரியாதை போய்விட்டது!

 போராடக் கற்றுத்தந்த சங்கம், பாடம் நடத்தவும் பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்துக் கொள்ளவும், அலுவலகத்திற்கு வரும் பாமரனை மரியாதையாக நடத்தி அவனது நியாயமான கோரிக்கைகளைப் பரிவோடு பரிசீலிக்கவும் கற்றுத் தந்திருந்தால் இன்றைய ஆசிரியர்கள் மதிப்பிழந்து, வெண்ணிறஆடை மூர்த்தி, லூசுமோகன்களாக நமது ஊடகங்களால் கிண்டலாகவும் கேலியாகவும் சித்திரிக்கப்படும் நிலைக்கு ஆளாகி யிருப்பார்களா என்ன? "பணிப் பண்பு" (work culture) பற்றிய கவலை எந்த ஆசிரியர்-அரசு ஊழியர் அமைப்புகளுக்கு இருக்கிறது

 பதவி உயர்வின்போதும், புதிய புத்தகம் வரும்போதும், பணியிடைப் பயிற்சியை அரசு மேற்கொள்வதை விட, அந்தந்தச் சங்கங்களே மேற்கொள்வது தானே சரி? இதை ஏன் எந்த ஆசிரியர் சங்கமும் செய்வதில்லை? புதிய புதிய விஷயங்களில் அது பாடப்பகுதியாக இருந்தாலும் சரி, மாணவர் உளவியல் சார்ந்ததாக இருந்தாலும் சரி- ஆசிரியர் களுக்குச் சந்தேகம் வந்தால் கேட்டு, பொறுப்பான பதில்பெறும் இடம் என்று ஏதாவது உண்டா? உமாவுக்கு இரங்கல் ஊர்வலம் நடத்தினால் மட்டும் போதாது, இனி உமாக்கள் கொல்லப்படாமல் தவிர்க்கவும் யோசிக்க வேண்டும்.

 அதிகாரிகளைக் கால்கை பிடித்தால் போதும், பாடங்களைப் பள்ளிக்கூடத்தில் நடத்துவதை விட ஏழை மாணவர்களானாலும் தன் வீட்டில் நடத்தும் தனிப்பயிற்சிக்கு எப்படியாவது இழுத்து மாணவனின் தன்மானத்தை சிதைத்து, எதையும் செய்து கொள்ளலாம் எனும் துணிச்சலை வளர்த்ததும் சங்கங்கள் தானே?

 கடமை பற்றிப் பாடம் நடத்தும் ஆசிரியர், தன் கண்ணெதிரில் நடந்து கொள்வதைப் பார்த்துத் தானே மாணவர் கற்றுக் கொள்வர்? மனச்சாட்சிக்கு மட்டுமே பயந்து பணியாற்ற வேண்டிய ஆசிரியர்களுக்குள் சாதி-மத-குழுபேதம், பணிமூப்பு-பதவிபேதம், பள்ளிக்கு வந்தும் சொந்தவேலை பார்ப்பது, வகுப்பு நேரத்தில் கதைபேசுவது, பெரிய இடத்துப் பழக்கம் தரும் துணிவில் பொறுப்பின்றி நடந்துகொள்வது, புதிதாக வந்திருக்கும் கல்வி முறை தொடர்பான செய்திகளைப் பேசும் "பிழைக்கத் தெரியாத" ஆசிரியரை அணிசேர்ந்து கொண்டு கிண்டல்செய்வது இவ்வளவையும் மாணவர் முன்பே அரங்கேற்றுவது என எத்தனை எத்தனை அசிங்கம்! இவற்றைக் களைவதில் ஆசிரியர் அமைப்புகளுக்குப் பொறுப்பில்லையா?

 இவ்வளவு ஏன், ஏதாவது ஒரு செய்தித் தாளையாவது காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஆசிரியர் எத்தனை பேர்? என்று புள்ளிவிவரம் எடுத்தால் கதை கந்தல்தான்! இதில் நல்ல மனசோடும், ஈடுபாட்டோடும் தன் கைக்காசு போட்டுப் பணியாற்றும் ஆசிரியர்களை நீண்ட நாளாகவே அரசுகள் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர் அமைப்புகளோ தவறு செய்பவரைக் காப்பாற்ற மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது!

 நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன?

 இதில் பெற்றோர் வந்து பார்க்கக் கூட அனுமதி கேட்டு அரை மணிநேரம் நின்றபின் அனுமதி மறுக்கப்படும் "ஸ்ட்ரிக்ட்"ஆன பள்ளிக்கூடம்தான் சிறப்பான பள்ளிக்கூடம் என்று பெற்றோரே பீற்றிக்கொள்ளும் மனநிலையை எங்குபோய்ச் சொல்வது? கவிஞர் நந்தலாலா சொல்வதுபோல- "மாணவர்களிடம் வெளியே விட்டுவிட்டு வரச்சொல்லும் தின்பண்டத்தையும் தண்ணீர் பாட்டிலையும் எப்போது உள்ளே மாணவரோடு வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே அவர்கள் சுமக்கும் புத்தகக் கட்டைத் தூக்கி வெளியே வீசுகிறார்களோ அப்போது தான் மாணவர்கள் சுதந்திரமாய் உணர்வார்கள்" என்பது நூறு விழுக்காடு உண்மை அல்லவா?

 நான் ஒருமுறை மாணவரிடம் பேசும்போது, "புத்தகம் நோட்டே இல்லாத, வீட்டுப் பாடம் இல்லாத, பரிட்சை இல்லாத பள்ளி வகுப்பறை எப்படி இருக்கும்?" என்று கேட்க, அவர்கள் ஓவென்ற சத்தத்துடன் "ரொம்ப நல்லா இருக்கும் சார், ஆசிரியரும் இல்லை என்றால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சார்என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது! பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான மாணவர் விமர்சனம்தானே?

 பாடத்திட்டத்தில் மதிப்பெண்ணை மட்டுமே விரட்டும் போட்டியில், மாணவரின் மற்ற பல திறமைகள் கண்டுகொள்ளப் படாததில் விரக்தி அடைவது இயல்பு அல்லவா? "மாணவர் முன்னேற்ற அறிக்கை" (Progress Card) இல் அவனது பாடும் திறமை, பேசும் திறமை, ஓவியத் திறமை, விளையாட்டு, சேர்ந்து செயலாற்றுவது, முக்கியமாக அடுத்தவருடன் அன்பாக இருப்பது என, இதர பல பண்பு-திறமைகளையும் பாராட்டி அவற்றுக்கும் மதிப்புப் போட்டு, பெற்றோர்க்கு அறிக்கை தருவதாக இருந்தால், "இதில் நான் இல்லை, இதோ இதில் நான் இருக்கிறேன்" என்னும் நிறைவு மாணவர்க்குக் கிடைக்கும். இப்போது மதிப்பெண்ணை மட்டும் காட்டும் முறையை நிச்சயமாக மாற்றியாக வேண்டும். அங்கீகாரம் தரப்படும் ஒவ்வொரு திறமையும்-பண்பும் மற்ற திறமைகளையும் வளர்க்கும் என்பதைக் கல்வித்துறை நிச்சயமாகப் பரிசீலிக்க வேண்டும்!

 நமது தேர்வுமுறை தோல்வியடைவதை மையமாகக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. தாள் திருத்தும் மையங்களில் தரப்படும் மாதிரி விடைத்தாள் (key)களைக் கட்டிக்கொண்டு அழாமல், சிந்தித்து எழுதும் மாணவர்க்கே சிறந்த மதிப்பெண் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கும் பயிற்சிதர வேண்டும். மாணவர் எழதியதை தரப்பட்ட விடைக்குறிப்போடு ஒப்பிட்டு "சரியாக இருக்கிறது" என்று எந்தவித சிந்தனையும் இல்லாமலே திருத்தப்படும் தேர்வுக்குத்தான் நோட்ஸ் தேவைப்படும். சிந்தித்து எழுதப்படும் விடைக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றால் ஆசிரியர்களையே அசர அடிக்கும் விடைகளை மாணவர் தருவார் என்பதில் நம்பிக்கை வேண்டும்.

 தேர்வு முறை மட்டுமல்லாமல், திருத்தும் முறையும் மாறவேண்டும். அல்லது, ஒவ்வொரு மாணவருக்கும் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வினாத்தாள்களில் ஒன்றைத் தந்து, அவரே விடையை இட்டு, கணினியால் உடனுக்குடன் திருத்தப்படும் விடைத்தாள் மதிப்பெண் படியை அவரே எடுத்துக்கொண்டு செல்லும் தேர்வு முறையை அறிமுகப் படுத்தலாம். இப்போது நடக்கும் தேர்வுகளால் மனித உழைப்பு விரயம் மட்டுமல்ல, மனஅழுத்தம், தேர்வு அறைக் கண்காணிப்பாளர்-மாணவர் மோதல் களையும் தவிர்க்கலாம். இதில் தனியார் பள்ளி நிர்வாகங்களின் நேரடிப் பங்களிப்பும் உண்டு! சொல்லும்விதம் நடந்துகொண்டால் தனிக்கவனிப்பும், நேர்மையுடன் நடந்து கொண்டால் அவரது வாகனம் சேதப்பட்டுக் கிடக்கும் பரிதாபத்தையும் தவிர்க்கலாம்.

தாய்-தந்தை இருவரில் ஒருவராவது தன் குழந்தையின் மீது அன்பு செலுத்த நேரம் ஒதுக்கி அதை வெளிப்படையாகக் காட்டவும் வேண்டும். இரண்டுபேரும் கண்டிப்பாக இருக்கும் இடம் குழந்தையின் கல்வி குறித்தே என்பதை மாற்றியாக வேண்டும். மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்களே! பணம் கறக்கும் படிப்பாகப் பிள்ளை படிக்கவேண்டும் என்ற ஆசையில் 9ஆம் வகுப்பிலிருந்தே அந்தக் குழந்தையின் தலையில் தன் பேராசையை ஏற்றிவிட்டு, பாடாய்ப் படுத்தும் பெற்றோர், என்ன சம்பாதித்தாலும் அவன் வாழும் முறையைக் கற்றுக்கொள்ளாமல் எப்படி வாழ்வான் என்பதை எப்போதுதான் யோசிப்பார்கள்?

 குழந்தை பள்ளிக்கு வருவது நல்ல மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல. இதை வீட்டிலிருந்து தனிப்பயிற்சி வழியாகவும் கற்றுக்கொள்ள முடியும். பலருடன் பழகி இந்த உலகத்தோடு ஒட்டி வாழக் கற்பதுதான் உண்மையான கல்வி! ஆசிரியர்கள்- பள்ளியில் இருக்கும் பெற்றோராகவும், பெற்றோர்- வீட்டிலிருக்கும் ஆசிரியராகவும் நடந்து கொள்வதுதான் ஒரு குழந்தையை அறிவோடும் பண்போடும் வளர்க்கும் ஒரே வழி!

கண்டிப்பும் கனிவும் சரிவிகித்த்தில் காட்டவேண்டிய பெற்றோர் இரண்டில் ஒன்றை மட்டுமே காட்டுவதில் குழந்தையின் மன அழுத்தம் நிச்சயமாகப் பாதிக்கப்படும். இது வெளிப்படும் இடமாக வகுப்பறை இருக்கும்போது, மனப்பிறழ்ச்சி அதிகமாகி தோல்விகளைத் தாங்காத மனநிலை இயல்பாகச் சிந்திக்க விடுமா?
அரசுகளின் முதல்பார்வை படவேண்டிய கல்விக்கு ஓரப்பார்வையே கிடைக்கிறது! ஒவ்வோராண்டும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி விழுக்காடு குறைந்துகொண்டே வருவதை கல்வியாளர் மட்டுமல்ல, நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்ட யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பலனை முதலில் கல்வித்துறைக்கல்லவா வழங்க வேண்டும்? அதுதானே உடனடித் தேவை! ஆனால், நமது நாட்டில் தலைகீழாக அல்லவா நடக்கிறது?

சுவையாக இனிக்க வேண்டிய பாடம் கசப்பதும், வெறுக்கத் தகுந்த சீரழிவு ஊடகங்கள் பலவண்ணத்திலும்-பலமடங்கு முன்னேறிய வாய்ப்பு-வசதிகளோடும் பல்லை இளிப்பதில் பலியாவது நம் சந்ததிகள் தானே என அரசுகள் கவலைப்பட வேண்டாமா?
மக்களுக்கு இலவசமாகத் தரப்படவேண்டிய கல்வியும் மருத்துவமும்தானே நம்நாட்டில் ஏழைக்கு எட்டாக் கனியாக இருக்கிறது?! மற்ற இலவசங்களையெல்லாம் நிறுத்திவிட்டு அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசம், அனைத்து மருத்துவமும் இலவசம் என்று கொண்டுவரட்டும், கல்விவள்ளல்கள் கடையை மூடி-ஓடிவிட மாட்டார்களா? மற்றவற்றை இலவசமாகக் கொடுக்க முன்வரும் அரசுகள், ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்ட கல்வி-மருத்துவம் இரண்டையும் எப்படியாவது வாங்கிவிடும் போட்டியில்தான் இளைய தலைமுறை பலியாகிறது என்பதை உணர வேண்டாமா?

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் வரும் குழந்தைகள் "பிஞ்சிலே பழுத்தது"போலப் பேசும்பேச்சுகளைப் பார்த்தால், வியப்புக்குப்பதிலாக நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது. அதிலும் சில காட்சிகளில் நகைச்சுவை எனும் பெயரில் குழந்தைகள் பேசும் சிலவசனங்கள் எரிச்சலையும் ஆற்றாமையையும் அல்லவா எழுப்புகின்றன?

"தமிழகத்தின் தங்கக் குரல்” "செல்லக்குரல்" "குட்டிக்குரல் தேடல்" என்று ஒவ்வொரு தொலைக்காட்சியும ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டாலும் போட்டிக்கு வரும் குழந்தைகள் பாடும் பாடல் குழந்தைள் பாடக் கூடியதாக இருக்கிறதா என்று எந்த நடுவராவது கவலைப் படுகிறாரா? 5வயதுக் குழந்தை முக்கி முணகிப் பாடும் காமரசப் பாடல்களைப் பாடும் குழந்தையின் வயதுக்கு இது சரிதானா என்று யோசிக்க வேண்டாமா? இவர்களின் வணிக நோக்கத்திற்கு, பாடிக்கொண்டிருக்கும் சில நூறு குழந்தைகள் மட்டுமல்லாமல், பார்த்துக் கொண்டிருக்கும் பல கோடிக் குழந்தைகளும் பலியாகி ஒரு தலைமுறையே "குழந்தைமை"யை இழந்து பிஞ்சிலே பழுத்து உதிரவேண்டியதுதான் விதியா?பேச்சு பாட்டு நடிப்பு மூன்றையும்தான் கேட்கிறேன்.
 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், "வாடா மாப்பிள வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்பன போலும் பாடல்களை ஏராளமான முகபாவங்களுடனும் தாராளமான இடுப்பாட்டத்தோடும் ஐந்து வயதுக் குழந்தை அனுபவித்துப் பாடுவதைப் பார்வையாளர்கள் பார்த்து பரவசப்படுவதும், நடுவர்கள் பார்த்துப் பாராட்டுவதும் சரியானதுதானா? இர்பான் கூட இப்படி ஒரு இந்தி திரைப்படம் பார்த்த்தாகச் சொன்னானே?
 ஒரு சிலர் மிகச் சரியான விமரிசனங்களோடு அந்த 'மீத்திற'க் குழந்தைகளின் அபாரத் திறமையை மனம்விட்டுப் பாராட்டும்போது நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி, இதுபோன்ற வயதை மீறிய விஷயங்களோடு வரும்போது அதற்குப் பயிற்சி கொடுக்கும் பெற்றோரிடம் "இப்படிச் செய்வது தவறு, இது குழந்தைகளுக்கும் நல்லதல்லஎன்று எடுத்துக் கூறித் திருத்துவதல்லவா கலைத் தாய்மையின் கடமையாக இருக்கும்? அவர்களே இதைப் பாராட்டிவிட்டால் பிறகு பெற்றோர்களின் குழந்தைப் பயணம் அந்தத் திசையில் தானே அதிவேகமாக இருக்கும்!
இப்போது சொல்லுங்கள்
 ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
கல்விமுறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், அரசுகள் ஆகிய நாம் எல்லாரும்தானே?

செத்துப் போன உமாவை உலகம் தெரிந்து கொண்டது.

குற்றுயிரும் குலை உயிருமாகத் திரியும் ஆயிரக்கணக்கான உமாக்களும் இர்பான்களும் சாகுமுன், நாமெல்லாரும் ஏதாவது செய்தாக வேண்டும். அதுதான் உமாவின் ரத்தம் நமக்குச் சொல்லியிருக்கும் செய்தி.
----------------------------------------------------------------- 
நன்றி,  கீற்று இணைய இதழ்  
http://www.keetru.com/ ஞாயிறு, 11 மார்ச் 2012
--------------------------------------------------------------- 
இக்கட்டுரையை விரும்பி எடுத்து வெளியிட்ட அறந்தாங்கி மண்வாசம்சிறப்பு மலர்க்குழு -சிபிஐ(எம்) தோழர்கள்  குறிப்பாக அதன் தலைவர்-கவிஞர் கவிவர்மன் அவர்களுக்கு எனது நன்றி. இதே நிகழ்வு  தொடர்பான  எனது கவிதையைப் படிக்க -http://valarumkavithai.blogspot.com/2012/02/blog-post_7985.html

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------