புதுயுகம் டி.வி.யில் ஏன் இந்த அசிங்கம்?

புதுயுகம்  டி.வி.யில்
ஏன் இந்த  அசிங்கம்?
(21-04-2015 மாலை 5.30மணியளவில்
புதுயுகம் டி.வி.யில் நடந்த நிகழ்ச்சி)
பெயரோ புதுயுகம்! நிகழ்ச்சியோ குழந்தைகளுக்கானது! ஆனால் “குட்டீஸ் கொண்டாட்டம்“ எனும் இந்த நிகழ்ச்சியில் நடப்பதோ அரதப்பழசான அசிங்க ஆட்டம்! 
ஏன் இந்தக் கொடுமை?


இன்று 21-04-2015 மாலை 5.30மணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சி பார்த்து மிகவும் அதிச்சியடைந்தேன். படத்தில் பின்னணியில் உள்ள வாசகங்களை சிரமப் பட்டாவது கொஞ்சம் கவனித்துப் படித்துப் பாருங்கள்..

             ‘உங்க வீட்டு Little Star,
          Super Star ஆக 
    ஒரு  செம்ம Chance’
எனும் கேவலமான கலப்படத் தமிழில் 
ஒரு விளக்கப் பின்னணி பேனர்வேறு!

அதில் கையைக் காலை ஆட்டி ஆடிக்கொண்டிருப்பவள் ஒரு சிறுமி..

அதுவும் பள்ளிக்கூட மாணவி! 
பள்ளிக்கூடக் கலைநிகழ்ச்சியாம்!

பள்ளிக்குழந்தைகளின் பலவகைத் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சியாம் அது! அப்படித்தான் அதில் சொல்லிக்கொண்டார்கள்...

ஆனால், கேவலமான வரிகளைக் கொண்ட பாடல் ஒன்றுக்கு, மிகவும் கேவலமான உடல் அசைவுகளுடன் அந்தக் குழந்தைகளை ஆடவிட்டுக் காட்டிக்கொண்டிருந்தார்கள்...

அந்த அறியாக் குழந்தைகளுக்குத்தான் தெரியவில்லை,
அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்க்குத்தான் நிதானமில்லை,
அந்த ஆசிரியர்களுக்குமா அறிவில்லை 
இது அசிங்கமென்று?

அந்த மக்களைப் பெற்ற மகராசி-மகராசர்களுக்குமா மண்டையில் மசாலாஇல்லை? இது மகாக்கேவலமென்று?

இந்தக் குழந்தைகளின் உளவியல் வளர்ச்சி போகப்போக எப்படி இருக்கும் என்று 
கொஞ்சம் கூட யோசிக்கமாட்டார்களா 
இந்த அறிவாளிகள்?

16வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைக் காதல் காட்சியில் நடிக்கவைப்பதோ, 
காதல் பாடல்களுக்கு ஆடவைப்பதோ 
சமூகக் குற்றம் (அது பள்ளிக்கூட விழாவாயினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியாயினும்) என்று 
யாரேனும் பொதுநல வழக்குப் 
போடக் கூடாதா சாமிகளே?

“சீருடையில் காதல் செய்வதாகப் படமெடுப்பது சமூகத்தைச் சீரழிவுப் பாதையில் சீக்கிரமாக்க் கொண்டுசேர்க்கும் என்பது படமெடுப்பவர்க்குத் தெரியாதா? –அது பள்ளிச் சீருடையாயினும் சரி, காவல்துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத்துறை என எந்தப் பணியாயினும் சரி, சீருடைக்கென்று ஒரு கண்ணியம் உண்டு. அதை மீறுவதாகக் காட்டுவது தவறு என்று ஏன் தெரியவில்லை?என்று நான் பேசிய ஒரு தொலைக்காட்சிப் பட்டிமன்றத்தில் கேட்ட அதே கொதிப்போடு தான் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்... 
ஊடகங்கள் பதில் தருமா?

சின்னஞ்சிறு குழந்தைகளைச் 
சீரழிவுப் பாதையிலே
கொண்டுவிடும் செயலுமொரு 
குற்றமென்றே அறியீரோ?!?
இன்னதென அறிந்தேயும் 
இவர்செய்யும் இப்பிழைக்கு
தண்டனைகள் தந்தேனும் 
தடுத்துவிட மாட்டீரோ?!?
                           --நா.முத்துநிலவன். 
--------------------------------

17 கருத்துகள்:

  1. உண்மை சகோ நானும் முன் மொழிகின்றேன் ..பொது நல வழக்கு போடுவதை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே சொல்கிறேன் - இது பற்றி வழக்குரைஞர்கள் பொதுநல வழக்குப்போட வே்ண்டும். நன்றி சகோதரி

      நீக்கு
  2. அய்யா,
    வணக்கம். நிச்சயமாய்,

    “ இன்தென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை
    மன்னியு மென்றெழிற் கனிவாய் மலரார் நம் அருள்வள்ளல்“

    இச்சீற்றம் இற்றைநாள் பெரிதும் வேண்டப்பெறுகிறது அய்யா!


    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் மன்னிக்க மாட்டார் என்றாலும் விசாரணை தண்டனை எல்லாம் இகலோகத்திலே நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம். உடனடிக்கருத்திற்கு நன்றி விஜூ.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    எல்லாம் வியாபாரம்....... அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாணிகம்தான். அதிலேயே ஒரு பொது நியாயம் இருக்க வேண்டாமா? அதுதான் என் கேள்வி. நன்றி ரூபன்

      நீக்கு
  4. பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவர்கள் நம் பிள்ளைகள் தொலைக்காட்சியில் வந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோன்ற நினைவுகளை மாற்றாமல் இவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதில்லையா அதுதான் என் ஆதங்கம் நன்றி முரளி

      நீக்கு
  5. கொடுமை...

    இப்படிப்பட்ட பெற்றோர்களை முதலில்... (எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா, வாரி இறைக்கச் சேற்றை அள்ளினால் நம் கையும் சேறாகத்தானே நாறிவிடும்? நன்றி வலைச்சித்தரே

      நீக்கு
  6. சரியான சாடல்...
    இதையெல்லாம் சாதாரணமாக எண்ணுமளவிற்கு பெற்றோர்களின் மனதிலும், மூளையிலும் தொலைக்காட்சி மற்றும் சினிமா மசாலா புரையோடிக் கிடக்கிறது...

    இப்படிப் பட்ட திருநாட்டில் தான், பெண்ணடிமைத்தனம் என்ற பெயரில் தாலி அறுப்பும், அன்பு என்ற பெயரில் முத்தப் போராட்டமும் நடைபெறுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பத்தி சரிதான். இரண்டாவது பத்தியை இதனோடு தொடர்பு படுத்தக் கூடாது. அதைத் தனியாகத்தான் பார்க்க வேண்டும். அதிலும் “தாலி அறுப்பு“ அல்ல, தாலி அகற்றல் என்பதே சரியானது. ஊடகங்களின் தவறான வழிகாட்டுதலால் தாலி அறுப்பு என்று புரிந்துகொண்டுவிட்டீர்கள். முத்தப்போராட்டம் உண்மையான காதலர்களோடு நடந்தால் தவறில்லை! கௌரவக்கொலைக்கும் இவற்றுக்கும் உள்ள தொடர்பையும் மறந்துவிடக் கூடாது நண்பரே. நன்றி

      நீக்கு
  7. இந்த மாதிரி கேடு கெட்ட சேனல்களுக்கு காசு செலவு பண்ணி கேபிளில் பார்க்கிறோமே நாம் தான் முட்டாள்கள். முதலில் இந்த சனியன்களுக்கு காசு கொடுப்பதை நிறுத்தித் தொலையுங்கள்.. மொத்த தமிழரும் கழிசடைகளை ஒதுக்கத் தொடங்கினால் அவர்கள் தானாக திருந்துவார்கள்.. அது வரைக்கும் இந்த அலங்கோலங்கள் அரங்கேறும் நம் வரவேற்பறைகள் ஊடாக..

    பதிலளிநீக்கு
  8. பெற்றோர் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் தம் குழந்தைகளைப் பங்கெடுக்க அனுமதிப்பதால் தான், குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து வெம்பி விடுகிறார்கள். காலங்கடந்த பிறகு வருத்தப்பட்டு என்ன செய்ய? விழிப்புணர்வூட்டும் அருமையான பதிவு ஐயா!

    பதிலளிநீக்கு
  9. கீதா ஏற்கெனவே ஒரு முறை சொன்னது போல் இந்த எண்ணம் கொண்டவர்கள் எல்லோரும் இணைந்து ஏதேனும் முயற்சிக்க வேண்டும். யார் ஆரம்பித்தாலும் அதற்கு நானும் துணை நிற்கத் தயார்.

    பதிலளிநீக்கு