நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு ஒரு கடிதம்

நடிகர் சங்கத் தலைவர் 
நாசர் அவர்களின் கவனத்திற்கு,

தோழரே வணக்கம். 

தங்களை 
தோழரே என விளித்தமைக்குதங்களின் சமூகம் சார்ந்த கடந்தகால வெளிப்பாடுகளே காரணம்.

தாங்கள் பொறுப்பேற்றவுடன் பொதுப்பிரச்சனைகளில் சங்கம் தலையிடாது.இது நடிகர்களின் பிரச்சனைகளை பேசுவதற்கான இடம் மட்டுமே..என்று நீங்கள் பேட்டியளித்தபோது,எல்லாரும் உங்களை திட்டித்தீர்த்தபோதும் இதை ஒரு முதிர்ச்சியான நிர்வாகியின் சரியான பதிலாகத்தான் நான் உணர்ந்தேன்.


அதனாலேயே உங்கள் காலத்தில் இச்சங்கம் சில உருப்படியான வேலைகளை செய்யும் என்ற நம்பிக்கை எனக்கும் பலருக்கும் எழுந்தது. நிற்க.

இப்போது எழுந்திருக்கும் ஒரு பாடல் தொடர்பான பிரச்சனை உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நம்புகிறேன்.நடிகர் சிம்புவும் இசையமைப்பாளர் அநிரூத்தும் வெளியிட்டிருக்கிற பாடல் எவ்வளவு மட்டரகமானது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழ்ச்சினிமா தோன்றிய காலத்திலிருந்தே அது பெண்களை ஒரு பண்டமாகவேதான் பார்த்துவருகிறது. போதைக்கும் போகத்திற்கும் மட்டுமே பெண்கள் என்ற கருத்தை தமிழ்ச்சினிமா சொல்லிக்கொண்டேயிருக்கிறது.அதற்கு உங்களை பொறுப்பாக்கமுடியாது. அது ஒரு பண்பாட்டு..அரசியல் புரிதல் சார்ந்தது.

ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் பாடலை,அதைப்போலத்தான் இதுவும் என புறந்தள்ளிவிடமுடியாது.
இப்பாடல் வக்கிரத்தின் உச்சம்.நாகரீகமற்றவர்களின் வெளிப்பாடு. கருத்துச்சுதந்திரம் கலைஞனுக்கு நிச்சயம் உண்டு.ஆனால் இதை கருத்துச் சுதந்திரத்தின் முகமாக எடுத்துக்கொள்ளமுடியாது.கருத்துச்சுதந்திரம் என்பதன் பேரால் நிகழ்த்தப்படும் கயமைத்தனம் இது.நாகரீகச்சமூகத்தில் பெண்களின் மீது கலை எனும்பேரில் நிகழ்த்தப்படும் வன்முறை இது. நாகரீகமுள்ள எவரும் இதை ஏற்கவும் முடியாது மட்டுமல்ல..இதை அனுமதிக்கவும் கூடாது.

நடிகர்சங்கத்தின் தலைவர் என்றமுறையில் கலைத்துறையை சார்ந்த இருவர் செய்திருக்கிற இந்த ஆபாச வன்முறையை நீங்கள் கண்டிக்கவேண்டும். சம்பந்தப்பட்ட இருவர்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இருவரின் சினிமா செயல்பாட்டுக்கும் குறைந்தபட்சம் ஒருவருடமாவது நடிகர்சங்கம் தடைவிதிக்க வேண்டும்.

சிம்புவும் அநிரூத்தும் பொது இடத்தில் மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளே உங்கள் நீதான நம்பிக்கையை தக்கவைக்கும். இல்லாவிட்டால் சினிமாக்காரன் எதுவேண்டு மானாலும் செய்யலாமென இப்போதிருக்கிற திமிரை நீங்களும் ஆமோதிப்பதாகவே ஆகிவிடும்.

நட்டநடு சபையில் துகிலுரியப்பட்டபோது நெட்டைநெடுமரங்களாய் நின்றிருந்த பாண்டவர்களுக்கும்
உங்கள் பாண்டவர் 
அணிக்கும் வித்தியாசம் இருக்கிறதென்று நம்புகிறேன்.


ஏனெனில் அவர் கதைமாந்தர்கள்தான்..நீங்களோ ரத்தமும்சதையுமான மனிதர்கள்.

சாட்டையை சுழற்றுங்கள் நாசர்.

( யாரேனும் இதை நாசரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மகிழ்ச்சி)
----------------------------------------------------------
 பி.கு(1) இப்படியான ஒரு கடிதத்தை நானே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தபோது இக்கடிதம் வாட்ஸப்பில் வந்தது. இதை எழுதியிருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த தமுஎகச மாநிலத் துணைப்பொதுச் செயலர் திரு கருப்பு கருணா அவர்களுக்கு நன்றி தெரிவித்து இக்கடிதத்தை எனது பதிவில் வெளியிடக் காரணம் உண்டு.  அப்படியே எங்கள் மாவட்டத்தில் நடந்த கண்டனப் போராட்டத்தையும் திரு நாசர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் ஆவலும் சேர்ந்திருப்பதுதான்.. கருணாவின் கடிதத்திற்கும் எங்கள் மாவட்ட ஆர்ப்பாட்டக் கோரிக்கைக்கும் ஒரு வேற்றுமை உண்டு. அவர் ஓராண்டுத் தடை கோருகிறார். நாங்கள் ஐந்தாண்டுத் தடை கேட்கிறோம். மற்றபடி கருத்தில் வேறுபாடில்லை என்பதால்தான் அதை அப்படியே எடுத்துப் போட்டிருக்கிறேன். 

நன்றி -- தோழர் கருப்பு கருணா! 
---------------------------------------- 
நன்றி திரு நாசர் அவர்களே!
இன்று வந்த செய்தியில்,
நடிகர் சங்கம் இதுபோலப் பெண்களை இழிவுபடுத்தும் பாடல்களை ஏற்காத தன்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டதாக ஊடகச் செய்திகள் சொல்கின்றன...
திரு நாசர் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.
21-12-2015
--------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக