தேர்தல் முடிவுக்கு முன்னால், 'கண்டெய்னர்' முடிவை அறிவியுங்கள் மிஸ்டர் தேர்தல் ஆணையம்!


திருப்பூரில் பறிமுதலான கண்டெய்னர்
யாரிடமிருந்து யாருக்கு?
தேர்தல் ஆணையத்திடம் பத்துக் கேள்விகள்-
(1) மளிகைக் கடை நாடாரிடமும், வட்டிக்கடைச் செட்டியாரிடமும் சிலலட்ச ரூபாய்களைப் பறிமுதல் செய்ததாக அறிவித்த தேர்தல் ஆணையம், ஒரே இடத்தில் ரூ.570கோடி பறிமுதல் செய்து 5நாளாகியும் யாருடைய பணம் என்று அறிவிக்காமல் குழப்புவது ஏன்?

(2)சான்றுகள் சரியாக இருந்தால்ரைட்  போ’  என்று அங்கேயே அனுப்பியிருக்க வேண்டும், இல்லையென்றால் பறிமுதல் செய்த கையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டு -வழக்குப் போட்டு நிறுத்தாமல்- கண்டெய்னர்களை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளக்குப்போட்டு நிறுத்தக் காரணம் என்ன?

(3)கோவை ஸ்டேட் வங்கிக் கிளையில் எடுத்த பணம் என்பது தெரிகிறது, அது யாரால் எடுக்கப் பட்டது என்பதை சொல்ல மறுத்தால், குற்றத்திற்கு உடந்தையான வங்கியும் குற்றவாளி தானே? (பணத்தை எடுத்தது யார் என்பதில் பொய் சொல்ல முடியாதே? உங்கள் பணம்தான் எனில் சான்றுகளில் ஏன் குழப்பம்?)

(4)நாங்கள் காரில் செல்லும்போது நிறுத்தும் தேர்தல் ஆணையம், அப்படியே “மூவிங் விடியோ கேமரா”வுடன் வந்து முதலில் வாகன எண்ணில் தொடங்கி, உள்ளே யார் இருப்பதுஎன்பதில் தொடர்ந்து, அப்படியே –கேமராவை ஆஃப் செய்யாமலே- “டிக்கி”யைத் திறக்கச் சொல்லிப் படம் பிடிக்கிறார்கள். அப்படிப் பிடித்த படத்தை உடன் வெளியிடாமல் “கைலியோடு வந்த போலீஸ்” என்றும், மூவரில் ஒருவர் தப்பிவிட்டார் என்றும் செய்தியைக் கசிய விட்டது ஏன்?


(5)கரூர் எஸ்.பி.வந்திதா ரூ.4கோடி பறிமுதல் செய்ததை அடிப்படையாக வைத்தே அரவாக்குறிச்சி தேர்தல் நிறுத்தப்பட்டது, அதுபோல திருப்பூர் வடக்குத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் திருமிகு விஜயகுமார் உண்மையில் நேர்மையான அலுவலராக இருக்க வேண்டும். எனில் கோவை தேர்தல் நிறுத்தப்படாமல் நடத்தப்படக் காரணம் என்ன? 4ஐவிட 570பெரிதல்லவா?
 
4கோடி பறிமுதல் செய்த கரூர் காவல் கண்காணிப்பாளர் வந்திதா
(ஆனால் திருப்பூரில் 3கண்டெய்னர் பறிமுதல் செய்த விஜயகுமார் படம் எந்தப்பத்திரிகையிலும் வரவில்லையே ஏன்?)
(6) முதல் லாரியில் - 60, இரண்டாவது லாரியில் - 65, மூன்றாவது லாரியில் - 70. மூன்று லாரிகளிலும் மொத்தம், 195 மரப்பெட்டிகளில் பணம் இருந்தது. எங்கள் ஊர்களில் ஸ்டீல் பெட்டிகளில் தான் பணம் எடுத்துச்செல்லப்படும். அதுவே விதி என்கிறார்கள். இதுஎன்ன புதிய முறை என்றாவது ஸ்டேட் வங்கி அறிவிக்க என்ன தாமதம்? இது தவறெனில் தேர்தல் ஆணையம் தாமதிக்க என்ன காரணம்?

(7)ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக அடுக்கினால் ஒரு கண்டெய்னரில் சுமார் 1200கோடி வரை அடுக்கலாம் என்கிறார்களே? ஆகமொத்தம் பிடிபட்டது சுமார் 5,000கோடி என்னும் சந்தேகத்திற்கு விடைஎன்ன?

(8)தேர்தல் பிரச்சாரத்தின்போது திரு வைகோ அவர்கள், “கொடநாடு பங்களாவில் 9கண்டெய்னர் மூலமாகப் பல்லாயிரம் கோடிரூபாய் கடத்தப்பட இருக்கிறது“என்று பகிரங்கமாகச் சொன்னாரே? அவர் சொன்னது உண்மையாகி விட்டது என்று ஒப்புக்கொள்ளலாமா?

(9) சிலலட்ச ரூபாய்க்கே துப்பாக்கிப் போலீஸ் காவல் வருவதைப் பார்த்திருக்கிறோம், எனில் 570கோடிக்கு ஐந்தாறு பேராவது போய் இருக்க வேண்டுமே? அதுவும் காவலர் வண்டியில் அல்லாமல் தனி இன்னோவா போகக் காரணம் என்ன? அது யாருடைய இன்னோவா? அதன்உரிமையாளர் யார் என்று கண்டுபிடிக்க முடியாதா என்ன?


(10)உடன் பிடிபட்டவை 3 இன்னோவா கார்கள் எனில் இரண்டுதான் லாரிகளோடு நிறுத்தப்பட்டுள்ளன. அந்த இன்னொன்னு எங்கே? (ஆக மொத்தம் தமிழ்நாட்டு மக்களுக்கு, கரகாட்டக்காரன் செந்தில் “அந்த இன்னொன்னு தான்”ணே இது” என்று சொன்னமாதிரி பதில் தரப்படுகிறது என்பது மட்டும் தெரிகிறது)

4கோடி பறிமுதல் செய்யப்பட்ட அரவாக்குறிச்சித் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது நியாயம் தான். எனில், சுமார் ஐயாயிரம் கோடி என்று சந்தேகத்திற்கு ஆளான பின் அந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வைக்காமல் தேர்தல் நடத்தியிருக்கக் கூடாது. குறைந்த பட்சம் இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும்வரை தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என்பதே என் கருத்து.
---------------------------------------------------------------
நன்றி - படங்கள் இணையம்.

8 கருத்துகள்:

  1. இந்தப் பணம் யாருடையது என்ற சந்தேகம் இருக்கிறதோ அவர்களுக்குத்தானே மடத்தமிழன்கள் எவ்வளவு பேர்கள் ஓட்டுப்போட்டிருக்கான்கள்? தன்மானத் தமிழனல்லவா? குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஆர்ப்பரிக்கும் தமிழன் அல்லவா?

    பதிலளிநீக்கு
  2. இருக்கும் கண்டய்னர்களைப் பற்றிப் பேசுகிறோம் ஐயா. எத்தனை போனதோ? அல்லது போகவிடப்பட்டதோ?

    பதிலளிநீக்கு
  3. நியாயமான கேள்விகள்! ஒவ்வொரு நேர்மையான நடுநிலையான வாக்காளனும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். பதில்தான் கிடைக்கவில்லை!

    பதிலளிநீக்கு
  4. எங்கும் பொய் எதிலும் பொய்யான அரசு அய்யா

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாபுதன், மே 18, 2016

    எல்லாம் குமாரசாமி கணக்கு மற்றும் வழக்கின் தன்மை போல முடித்து சுபம் போடப்படும்.அதிலும் இதிலும் இட்லி தான் இதையெல்லாம் நூல் பாசத்தால் செய்து கொடுப்பவர். தத்து இதில் புகுந்து தன் திறமை காட்டி அதற்கேற்ப அள்ள முடியாமல் போனது மிக வேதனை தரும் நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  6. விரைவில் உண்மை வெளிவரும் என நம்புவோம்....

    பதிலளிநீக்கு
  7. பொய்யை மெய்யென நம்ப வைத்த அரசு
    உண்மையை புதைத்து மக்களை ஊமையாக்கி விட்டது .

    பதிலளிநீக்கு
  8. வெளிவரும் முடிவுகள்..... இப்படிப்பட்டவர்களுக்குத்தானே நம் மக்கள் ஓட்டளித்துள்ளார்கள் என்ற ஆதங்கம் மேலிடவைக்கிறது...மக்கள் அறியாதவர்களா என்ன? என்றாலும் முடிவுகள்?

    கீதா

    பதிலளிநீக்கு